தூத்துக்குடி நகரில் சாலைகளில் சுதந்திரமாக சுற்றி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டுனர்களுக்கும் இடையூறு விளைவித்த மாடுகளை குறிவைத்துக் கொண்டு மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உத்தரவின் பேரில், நகர் நல அலுவலர் டாக்டர்‌ சரோஜா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையிலான குழு திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை எட்டையாபுரம் ரோடு, பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் திரிந்த 36 மாடுகளை பறிமுதல் செய்து மாநகராட்சியின் கோசாலையில் அடைத்தது.

பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளுக்கான அபராதம் கட்டண விவரம்:

முதல் முறை: மாடு – ரூ.5000 / கன்று – ரூ.2500

இரண்டாவது முறை: மாடு – ரூ.10,000 / கன்று – ரூ.5000

மூன்றாவது முறை: மீண்டும் பிடிபட்டால் மாடு மாநகராட்சியின் சொத்தாக மாற்றப்படும்

சாலைகளில் மாடுகள் உலாவுவதால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுவரும் இடையூறுகளை அகற்ற இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இனி கண்டில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட மாடுகளை கோசாலையில் நேரில் சென்று பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, நகர் நல அலுவலர் டாக்டர்‌ சரோஜா, சுகாதார அலுவலர் ராஜபாண்டி ஆகியோர், மாடுகளுக்கான தீவனத்தை நேரம் தவறாமல் வழங்க வேண்டும் என பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர்.