பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கிழக்கு மண்டலத்தில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும்  மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில், தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து  கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனே தீர்வு காண்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கிழக்கு மண்டல முகாமானது புதன்கிழமை (19.03.2025) இன்று காலை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், முன்னிலையில் நடைபெற்றது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 21 முதல் 29,38 முதல் 41,46,47) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி நிர்ணயம், சொத்துவரி பெயர் மாற்றம், திருத்தங்கள், தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில் வரி, பாதாள சாக்கடை, பிறப்பு மற்றும் இறப்பு சான்று  திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை சம்மந்தமான மனுக்களை பொதுமக்கள் மேயரிடம் அளித்தனர்.

மேயர் ஜெகன் பெரியசாமி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்து மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

கூட்டத்தில் துணை ஆணையர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், சுகாதார குழு தலைவர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.