தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதி — முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் பகுதிகளில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பளத் தொழிலை அழித்து, கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட கூடாது என வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ.பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

உப்பளத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் பொன்ராஜ், பேச்சிமுத்து, பூமயில், பரமசிவன், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், விவசாய சங்கம் சார்பில் ஜோதிமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், தமிழக வெற்றி கழகத்தின் ஜே.கே.ஆர். முருகன், நாம் தமிழர் கட்சியின் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் மற்றும் அன்னலட்சுமி, ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் கதிர்வேல், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் இணைந்து பங்கேற்றனர்.

அரசு உடனடியாக உப்பளத் தொழிலை காக்கும் நடவடிக்கைகளை எடுத்து, கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஒருமித்த கோரிக்கை வைக்கப்பட்டது.