தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் கொல்லம்பரம்பு–சந்திரிகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல் குவாரி காரணமாக கிராமப்புற சாலைகள் மோசமாக சேதமடைந்து, பொதுமக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.

கல் மற்றும் சரண் 40 முதல் 60 டன் வரை தினசரி கனரக வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுவதால், வீரபாண்டியாபுரம் – முள்ளூர் – குளத்தூர் வழியாக புதியதாக அமைக்கப்பட்ட பிரதமர் மந்திரி கிராம சாலை திட்டச் சாலை முற்றிலும் உடைந்து போயுள்ளது. இதனால் அந்தப் பகுதியை சார்ந்த மக்கள், விவசாயிகள், பள்ளி–கல்லூரி மாணவர்கள் பெரும் அவலத்தில் சிக்கியுள்ளனர்.

மேலும் கொல்லம்பரம்பு–சந்திரி செல்லும் சாலை முழுவதும் சேதமடைந்ததால், சதுரகிரி – கொல்லம்பரம்பு – வீரபாண்டியபுரம் வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்து சேவை முழுவதும் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

இந்த தனியார் கல் குவாரியை உடனடியாக அப்புறப்படுத்தி, கிராமப்புற சாலைகளில் இயங்கும் கனரக வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு குளத்தூர் பேருந்து நிலையம் முன்பு சமூக செயற்பாட்டாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது குரலை பதிவு செய்யுமாறு சாமு காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.