பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களை வென்றதன் மூலம் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஐக்கிய ஜனதாதளம் (JDU) கட்சி தலைவர் நிதிஷ்குமார் 10வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றார்.

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்ற மகிழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் மணிநந்தன் ஆலோசனையிலும், மாநில தொழிலாளர் அணி தலைவர் தாமரை வெங்கடேசன் வழிகாட்டுதலிலும், மாவட்ட தலைவர் டி.எம். குழந்தைபாண்டி தலைமையிலும், கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி மகிழ்ச்சி பகிரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர். மேகாஸ், மாவட்ட செயலாளர் மாரியப்பன், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆதிலிங்கம், வடக்கு மண்டல தலைவர் அற்புதமணி, துணைத்தலைவர் ராசுக்குட்டி, கயத்தாறு ஒன்றிய பொருளாளர் முருகேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பீகாரில் சாதனை படைத்த நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றதை ஒட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.