உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் இன்று மீனவர் சங்கங்கள் சார்பில் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவின் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு கேக் வெட்டி, உலக மீனவர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

அமைச்சர் கீதா ஜீவன் தனது உரையில், மீனவர்களின் பாதுகாப்பு, நலன், கல்வி, தொழில் மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கான மாநில அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி, “மீனவர்கள் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக உள்ளனர்; அவர்களின் முன்னேற்றம் எப்போதும் அரசின் முதல் முன்னுரிமை” என தெரிவித்தார்.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பல்வேறு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

உலக மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த விழா, மீனவர்களின் ஒற்றுமை, உரிமை மற்றும் நலனுக்கான திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.