தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சரவணக்குமாரிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தது திமுக வட்டாரத்தில் பாராட்டை பெற்றுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “உடன்பிறப்பே வா” எனும் தலைப்பிலான கலந்துரையாடலில், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு பொறுப்பாளர்கள் திமுக தலைவரை சந்தித்து பார்வையிட்டனர். அதிகாரிகள், நிர்வாகிகள் வழங்கிய தொகுதி நிலவரம், மக்கள் மனநிலை, அரசு சாதனைகள், வருங்கால தேர்தல் வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் விரிவாக கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் – மீனவர் நலன் – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பில், கலந்து கொள்ளாத தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, ஒரு மாதத்திற்கு முன்பு அவரது மகள் கல்லூரி பயணத்தின் போது கரூர் அருகே ஏற்பட்ட விபத்தில் சரவணக்குமார் காயம் அடைந்து, கோயம்புத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் சரவணக்குமாரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
சிகிச்சை பலனளித்து தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தாமாகவே நலம் கேட்ட முதலமைச்சருக்கு சரவணக்குமார் நன்றி தெரிவித்தார்.