தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்புலிவெட்டி கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை திட்டக்கூறுகள் வருவாய் ஒப்படைப்புத் திட்டம் 2025–2026 திட்டத்தின் கீழ் ரூ.75.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய மினி ஜவுளி பூங்கா அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (28.11.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

முப்புலிவெட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் இந்த மினி ஜவுளி பூங்கா ஒரு புதிய முன்னேற்ற அத்தியாயமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.