தூத்துக்குடி மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று காலை நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், ஆணையர் ப்ரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையிலும் பல்வேறு முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில், அதிமுக எதிர்க்கட்சி கொறடாவும் மாநகராட்சி கவுன்சிலரும் வழக்கறிஞருமான மந்திரமூர்த்தி பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

கடந்த ஆண்டு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகம், சி.வ. அரசு பள்ளி ஆகிய பகுதிகளிலும், இந்த வருடமும் பெய்த கனமழையில் மீண்டும் மழைநீர் தேங்கியிருப்பதை அவர் கவனத்தில் கொண்டார். பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் முக்கிய இடங்களில் இத்தகைய நிலை தொடர்வது ஆபத்தானது எனக் குறிப்பிடும் அவர், நிரந்தர தீர்வு காண மாநகராட்சி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதேபோல, புதியதாக கட்டி வரும் அரசு மருத்துவமனை, அரசு அறிவித்தபடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக திறக்கப்பட வேண்டும்; அதில் மக்கள் ஏமாற்றம் ஏற்படக்கூடாது என தெரிவித்தார்.

தூய்மை பணியாளர்களின் நலனை குறித்து பேசும் அவர், தற்போது வழங்கப்படும் உணவு வசதியை விட, அவர்களின் பணியை நிரந்தரம் செய்வதற்குத் தமிழக அரசு முன்வர வேண்டும் என தெளிவாகக் கூறினார். இதுவே அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் உண்மையான தீர்வாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் நிலை தொடர்வதாகக் கூறி, அவற்றை முழுமையாக சரிசெய்ய தேவையான வடிகால் மற்றும் நீரேற்ற பணிகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.