தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பக்கிள் ஓடைக்கு கழிவுநீர் செல்லும் கால்வாயில் சிறுபாலம் கட்டும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாநகர் 11வது தெருவில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதில் தடையால், அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து மக்கள் நேரில் முறையிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கால்வாயில் சிறிய பாலம் அமைத்து கழிவுநீர் தடையின்றி செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அப்பணிகளின் முன்னேற்றத்தையும், கழிவுநீர் வெளியேற்ற பணிகளையும் அமைச்சர் கீதாஜீவன் தளத்தில் சென்று ஆய்வு செய்தார். மேலும், அண்ணாநகர் 6வது மற்றும் 7வது தெருவிற்கு இடையிலும், 9வது மற்றும் 10வது தெருவிற்கு இடையிலும் உள்ள குறுக்குத் தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர் கனகராஜ், வட்டச் செயலாளர் பாலு (எ) பாலகுருசாமி, பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கல்யாணி, மணி, அல்பட் உள்ளிட்ட பலர் இணைந்து கலந்துகொண்டனர்.