தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில் அமைந்துள்ள வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் திறப்பு விழா இன்று (07.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகிற நவம்பர் 11ஆம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள SIR திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம் குறித்து பேசும்போது,

“SIR திட்டத்தை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உண்மையிலும் நேர்மையிலும் நடத்த வேண்டியிருந்தால் போதிய அவகாசம் கொடுத்து அமல்படுத்தியிருக்கலாம். ஆனால் பீகாரில் பலரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது என்பதை நாம் தெளிவாக பார்த்தோம். இதே நிலை மகாராஷ்டிரா, ஹரியானாவிலும் உள்ளது. இது ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சியாகும்,”
என்று கடும் விமர்சனம் முன்வைத்தார்.

மேலும் அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதைப்பற்றி தெளிவாகப் பேசியுள்ளார். நம் முதலமைச்சரும் அதற்கு முழு ஆதரவு அளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி வாக்காளர்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கப்படுகிறது. இதையெல்லாம் எதிர்த்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன,”
என்று கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அவர் மேலும், “பெண்கள் மீதான எந்தவொரு குற்றத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூகம் பெண்மீது பழிசுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அவர் மிகக் கடுமையான தண்டனையை உறுதிசெய்வார்,”
என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த கேள்விக்கு பதிலளித்த அவர், “‘உடன்பிறப்பே வா’ சந்திப்பில் வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை வழங்குவது ஒரு கட்சித் தலைவராக முதலமைச்சரின் கடமையாகும். யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் கூறப்படவில்லை,”
என்று விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ எம்.சி. சண்முகையா, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.