தூத்துக்குடி மாநகரத்தின் காந்திநகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் காந்திநகர் தொடக்கப் பள்ளியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி அவர்களுடன் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின்போது, பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் வசதி, கழிப்பறை பராமரிப்பு, வகுப்பறை பழுது பார்க்கும் பணிகள், பாதுகாப்பு சுவர், விளையாட்டு மைதான வசதி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வு நடைபெற்றது.

பள்ளியில் உடனடி திருத்தப் பணிகள் மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் அறிவுறுத்தியதுடன், மாணவர்கள் சிரமமின்றி கல்வி பயிலும் சூழலை உருவாக்க அரசு தேவையான படிகளை எடுத்து வரும் என்பதை தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், வட்டச் செயலாளர் டென்சிங் உள்ளிட்டோர் உடன் சேர்ந்தனர்.