தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், தாயுமானவர் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, திட்டங்களின் தற்போதைய நிலை, பயனாளிகள் தேர்வு நடைமுறை, தொகை வழங்கல் நிலவரம், நிலுவை மனுக்கள் மற்றும் குறைதீர்வு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார். தகுதியான எந்த பயனாளியும் விடுபடக்கூடாது என்றும், பொதுமக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் விண்ணப்ப நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், மகளிர் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் சமூக மாற்றத்தை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், களத்தில் உள்ள சவால்களை உடனுக்குடன் தீர்க்க அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, வருவாய் வட்டாட்சியர் ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலர் ஞானராஜ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகேஸ்வரி ஆகியோர் திட்டங்களின் செயல்பாடு குறித்து விளக்கமளித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.