தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம், தோப்புத் தெரு, வீரநாயக்கன்தட்டு, உப்பாற்று ஓடை, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக உருவான நிலைமையை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தப் பகுதிகள் சுமார் 12 கிலோமீட்டர் நீளத்தில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளன. தற்போது கோரம்பள்ளம் குளத்தில் இருந்து பத்தாயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழைநீர் மாநகரப் பகுதிக்குள் புகாத வகையில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

பகுதிகளில் உள்ள நீரின் ஓட்டம், வடிகால் பாதைகள், நீர் தேக்கம் போன்ற விவரங்களை மேயர் ஆய்வு செய்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளரும் மாநகர மன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், மன்ற உறுப்பினர் முத்துவேல் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.