தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பூபால் ராயபுரத்தில் புதியதாக கட்டப்பட்ட, அனைத்து வசதிகளுடனும் கூடிய மீன் ஏலக்கூடத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இங்கு முன்பிருந்த பழைய ஏலக்கூடத்தில் போதுமான வசதிகள் இல்லாததால், கட்டிடம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது என மீனவ மக்கள் மேயர் ஜெகனிடம் கடந்த நாட்களில் கோரிக்கை வைத்திருந்தனர். அதை தொடர்ந்து, மக்கள் நலன் கருதி அதன் அருகிலேயே நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஏலக்கூடம் மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்டது.

புதிய கட்டிடத்தை ஆய்வு செய்த மேயர் ஜெகன், அங்கு இருந்த மீனவ மக்களிடம் “உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கிறதா? மேலும் ஏதேனும் தேவை இருக்கிறதா?” என்று கேட்டறிந்தார். அதற்கு மீனவ மக்கள், மீன் கழிவு நீர் வெளியேறக்கூடிய முறையான வசதி அமைக்கப்பட்டிருப்பது மற்றும் அது அருகிலேயே உள்ள ஓடையில் இணைக்கப்பட்டிருப்பது குறித்து திருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த ஏலக்கூடத்தில் 32 பேருக்கு வியாபாரம் செய்யும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாக, வியாபாரிகளை குழு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர். அதற்கு மேயர் ஜெகன், “இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.

புதிய கட்டிடம் குறித்து மேயர் ஜெகன் கூறுகையில் “மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று, நவீன வசதிகளுடன் இந்த புதிய ஏலக்கூடம் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்” என்றார்.

இந்த ஆய்வின்போது முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளருமான ரவீந்திரன், வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், திமுக நிர்வாகிகள் பிரபாகர், ஜேஸ் பார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.