புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வரி வசூல் செய்ய கூடாது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை (டூ) தூத்துக்குடி சாலை எந்த பராமரிப்புப் பணியும் இல்லாமல், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் சேதமடைந்துள்ள சாலையை முழுமையாக சீரமைக்கும் வரை எலியார்பத்தி மற்றும் புதூர் பாண்டியபுரத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவு பிறப்பித்து.

ஆனால், புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் இன்று காலை முதல் வழக்கம் போல வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. டோல்கேட்டில் பாதுகாப்புக்காக இருக்கும் போலீசாரும் வசூல் செய்ய ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் டோல்கேட் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரிகளை டோல்கேட் முன்பு நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் டோல்கேட்டில் பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவினை மீறி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள புதூர் பாண்டியாபுரம் சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு வரி வசூல் செய்வதை கண்டிப்பதோடு மட்டுமல்லாது மதுரை உயர்நீதிமன்ற உத்தரை புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடிகள் மீற வேண்டாம் எனவும் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.