ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலப்பைபட்டி கிராமத்தை சேர்ந்த பேச்சிமுத்து (முத்துசாமி), நாரைக்கிணறு கிராமத்தை சேர்ந்த பொன்னுதுரை (பாக்கியராஜ்), கொடியன்குளம் கிராமத்தை சேர்ந்த புதியவன் (சுடலை) ஆகியோர் வேலைக்காக மேற்கு ஆப்பிரிக்கா நாட்டிலுள்ள மாலி பகுதிக்கு சென்றிருந்தனர்.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களை விரைவில் மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் மூலம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக உறுதியளித்தார்.

அதற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

பின்னர், கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து, அவர்களை பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.