திருச்சிராப்பள்ளி, நவம்பர் 10:
முதியோரின் நலனையும், சமூக உறவுகளையும் மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் “அன்புச் சோலை” திட்டம் மாநில அளவில் துவங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பானை பவுண்டேஷன் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதியோருக்கான மனமகிழ் வள மையங்களாக இயங்கவுள்ள “அன்புச் சோலை” மையங்களில் யோகா, புத்தக வாசிப்பு, திறன் மேம்பாடு, மருத்துவ ஆலோசனை, பொழுதுபோக்கு போன்ற சேவைகள் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் மனநலம், உடல்நலம், சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சந்திரசேகரன் நகரிலும் இன்று காணொளி காட்சி வழியாக திட்டம் துவங்கியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அன்புச் சோலை மையத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

முதியோரின் மனநலனையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட “அன்புச் சோலை” திட்டம், மக்கள் நலனை முன்னிருப்பில் வைத்து செயல்படும் தமிழ்நாடு அரசின் புதிய முன்னேற்ற முயற்சியாக பார்க்கப்படுகிறது.