கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய யூடியூபர் முக்தார் அகமதுவை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடி நகரில் நாடார் சமூக அமைப்புகள் சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே மாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்பான்மையான நாடார் சமூகத்தினர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். காமராஜரின் சமூக சேவை, கல்வி வளர்ச்சியில் அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்புகளை நினைவுபடுத்தி, அவதூறு பேச்சுகளை கண்டித்து கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். யூடியூபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நாடார் சமூக முன்னணித் துறை பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.