2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்கள் பிரச்சாரத் திட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில், தூத்துக்குடி தொகுதி திமுக சார்பில் புதுமையான யுக்தி ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், வாக்காளர்களை, குறிப்பாக பெண்களை கவரும் நோக்கில் ‘அஞ்சல் வழி பிரச்சாரம்’ எனும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாநகர திமுக பெயரில், வீடுகள்தோறும் தபால் அனுப்பப்பட்டு வருகிறது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் முக்கிய பிரச்சார அம்சமாக இடம்பெற்றுள்ளது.

தபாலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட கொள்கையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறார். ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ மூலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சி மலர்ந்துள்ளது. வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தந்து இந்த மக்கள் நல ஆட்சியை தொடரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”

தூத்துக்குடியில் பலரது வீடுகளுக்கு சென்றடைந்த இந்த தபால் தற்போது மக்களிடையே பெரும் கவனம் ஈர்த்துள்ளது. அரசியல் வட்டாரங்களில், “மக்களின் மனதில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் தபால் யுக்தி, திமுகவுக்கு தேர்தல் பலனாக அமைய வாய்ப்பு அதிகம்” என மதிப்பிடப்படுகிறது.