நாடு முழுவதும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களை கண்டித்தும், அதற்கு துணை போகும் ஒன்றிய மொடி அரசைக் கண்டித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுவின் சார்பில் நேற்று (18.11.2025) செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகரச் செயலாளர் தோழர் ஜி. தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் மருத்துவர் அறம் சிறப்புரையாற்றி, சமூக நீதி மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அதற்கு எதிராக மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

மாவட்டச் செயலாளர் தோழர் பி. கரும்பன், உதவி செயலாளர்கள் வி. பாலமுருகன், ஜி. பாபு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி. ஞானசேகர், மாவட்ட அலுவலக செயலாளர் எஸ். மாடசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் அந்தோணி சௌந்தர்ராஜன், மனோன்மணி, செந்தில், ஆறுமுகம், விஜயலட்சுமி, பொன்னுச்சாமி, அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

AITUC மாவட்டச் செயலாளர் லோகநாதன், தலைவர் கிருஷ்ணராஜ், விஜயகுமார், இசக்கி பாலசிங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க, வெகுஜன அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், கணிசமான பெண்களும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வலுப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாட்டில் நிலவும் சமூக அநீதி, பெண்கள் மீதான வன்முறை, தலித் மற்றும் பழங்குடியினரின் உரிமை மீறல்கள் குறித்து மத்திய அரசை எதிர்த்து தீவிரக் கண்டனக் குரல் எழுப்பப்பட்டது.