சென்னை, நவம்பர் 19 — தமிழக பொதுநூலகத் துறையில் சிறப்புப் பணியாற்றி மாநில அளவில் குறிப்பிடத்தக்க சேவையை வழங்கிய நூலகர்கள், வாசகர் வட்டத் தலைவர்கள் மற்றும் நூலக வளர்ச்சிக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில், சிறந்த நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது”, வாசகர் வட்டத் தலைவர்களுக்கு “நூலக ஆர்வலர்” விருது வழங்கப்பட்டது.

மேலும், அதிக உறுப்பினர் சேர்க்கை சாதித்த நூலகங்கள், கட்டிடம் பராமரிப்பில் சிறந்து விளங்கியவர்கள், நூலக மேம்பாட்டிற்கான நன்கொடையாளர்கள் ஆகியோர் கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நூலக வளர்ச்சி, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூகத்தின் அறிவாற்றல் முன்னேற்றத்தை முன்னிறுத்தும் வகையில் மாநில அரசு ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருதுகள், நூலகச் சேவையின் மதிப்பையும் சமூகத்தில் அதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.