தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் 04.11.2025 முதல் 04.12.2025 வரை நடைபெறுகின்றன. இதையடுத்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான இளம்பகவத் நேரில் பார்வையிட்டார்.

கலெக்டர் இளம்பகவத் தெரிவித்ததாவது “தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கும் பணியை இன்று காலை முதல் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 2,87,477 வாக்காளர்களுக்கும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் 2,55,197 வாக்காளர்களுக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 14,90,657 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கி, அதனை பூர்த்தி செய்து திரும்ப பெறுவதற்கான பணிகள் ஒருமாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூன்று முறை வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து படிவங்களை வழங்குவார்கள். படிவங்களில் ஏதேனும் மாற்றம் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதற்கான அறிவிப்பும் வழங்கப்படும்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது “இந்த நடவடிக்கையின் மூலம் இறந்துவிட்ட வாக்காளர்கள், இடம்பெயர்ந்தோர், இரட்டை பெயர் பதிவுகள் போன்றவை நீக்கப்படும். இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் மூலம் கண்காணிப்பு ஏற்பாடு செய்துள்ளது.

மொத்தம் 1,600-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் மாவட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலர், ஒவ்வொரு 15 அலுவலர்களுக்கும் ஒரு கண்காணிப்பாளர் என மொத்தம் 2,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், அரசியல்கட்சிகளைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களும் பயிற்சி பெற்று பணியில் பங்கேற்று வருகின்றனர். இதனால் குளறுபடிகள் ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு,” என்று கலெக்டர் தெரிவித்தார்.

அவர் மேலும், “வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு வரும் போது வாக்காளர்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் தங்களது விவரங்களை சரிபார்த்து, திருத்த வேண்டியவை இருந்தால் உடனே தெரிவிக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் ப்ரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம், ஒட்டப்பிடாரம் வாக்காளர் பதிவு அலுவலரும் உதவி ஆணையர் (கலால்) கல்யாணகுமார், வட்டாட்சியர்கள் திருமணி ஸ்டாலின் சண்முகவேல், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெயராஜ் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.