மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் முக்குலத்தோர் சார்பாக அதன் நிறுவனத்தலைவர் இசக்கிராஜா தேவர் நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து மையமான மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் பெண் வீராங்கனை, விடுதலைப் போராட்டத்தின் விடிவெள்ளி என போற்றப்படுபவர் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரைச் சூட்டுவதாக அறிவித்ததை, பிஎம்டி இயக்கமும் முக்குலத்தோர் சமூகமும் மனமார நன்றியுடன் வரவேற்கின்றோம்.

1780 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயருக்கு எதிராக பெண் படைகளைக் கொண்டு போராடி, மருது சகோதரர்களுடன் இணைந்து சிவகங்கை அரசை மீட்டெடுத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தலைவியே வேலுநாச்சியார். மதுரை–சிவகங்கை பகுதிகளை இணைக்கும் இந்தப் பெரிய சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது மிகுந்த பொருத்தமுடையதும் பெருமைக்குரியதும் ஆகும்.

இது வேலுநாச்சியார் தியாகத்திற்கான மரியாதை மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களின் உணர்வுகளையும், முக்குலத்தோர் சமூகத்தின் பெருமையையும் உயர்த்திய பெரும் கௌரவமாகும். சரித்திரத் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எமது மனமார்ந்த நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறோம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.