தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய 10 காவல் நிலையங்களின் ஆய்வாளர்களுக்கும், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப. இன்று (13.11.2025) நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, விசாரணை, நீதிமன்ற பணி உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்ட எட்டையபுரம், ஆத்தூர், கோவில்பட்டி மேற்கு, ஆறுமுகநேரி காவல் நிலையங்கள் சிறந்த பணிக்காக தேர்வு செய்யப்பட்டன.

பொதுமக்களின் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட சிப்காட், விளாத்திகுளம், தாளமுத்துநகர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையங்களும் சிறப்பாக செயல்பட்டதாக மதிப்பிடப்பட்டன.

அதேபோன்று, அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுத்து சிறப்பாக பணியாற்றிய சிப்காட், முறப்பநாடு, கோவில்பட்டி மேற்கு மற்றும் திருச்செந்தூர் காவல் நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டன.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் நினைவு பரிசு பெற்று பாராட்டைப் பெற்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், “காவல் பணியில் ஒழுக்கம், திறமை, மக்கள் நம்பிக்கையை உயர்த்தும் செயல்பாடு மிக முக்கியம். இவ்வாறு சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள் மற்றவர்களுக்கு முன்மாதிரி,” எனக் கூறி பாராட்டினார்.