தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமனக் கவுன்சிலராக ஆறுமுகம் பதவி ஏற்றதையடுத்து, அவருக்கு வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் ஆறுமுகம் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

இதையடுத்து, தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி ஆறுமுகத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரது புதிய பொறுப்பில் பணி சிறக்க கனிமொழி எம்.பி மனமார வாழ்த்தினார்.

இந்த சந்திப்பில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவாணி, வட்டச் செயலாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.