தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சி கொறடா மற்றும் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பல்வேறு பொதுநல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

அவர் தெரிவித்ததாவது தமிழ்நாடு அரசு சார்பாக பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகை விலை வீட்டுமனைகள் இன்னும் தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி எல்லைக்குள் பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், தூத்துக்குடி தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை, வெளியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யும் விலையை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தி, அவற்றின் சுகாதாரத் தரத்தை மாநகராட்சி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரினார்.

அத்துடன், 47வது வார்டின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள சுமார் 55 குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கையை அவர் எதிர்த்தார். குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சட்டபூர்வ பட்டாக்களை ரத்து செய்யும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மந்திரமூர்த்தி முன்வைத்த கோரிக்கைகள் மாநகராட்சி கூட்டத்தில் கவனத்தை ஈர்த்தன.