பிறவியிலேயே இடது கண் இல்லாமல் பிறந்த 9 வயது சிறுமிக்கு தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
நாகர்கோவில் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பொண்ணு என்பவரின் மகள் முத்துசெல்வி (9) பிறவியிலேயே இடது கண் இல்லாத குறைபாட்டுடன் பிறந்திருந்தார். இதையடுத்து, கடந்த 20.06.2026 அன்று தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சைப் பிரிவில் அவருக்கு கண்குழி சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பத்மநாபன் மற்றும் உறைவிட மருத்துவர் மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் உத்தரவின் பேரில் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தூத்துக்குடி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவத் துறை தலைவர் (பொறுப்பு) மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளருமான மருத்துவர் ரீட்டா பெப்சி ராணி தலைமையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் அருணாதேவி, மயக்கவியல் மருத்துவர் ஸ்ரீராம், மருத்துவர் அஜய் சந்தோஷ் டேவிட், மருத்துவர் ஜெயந்தி, மருத்துவர் மின்சா, மருத்துவர் திவ்யா மற்றும் செவிலியர்கள் சுரேகா, ரத்னா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
கண்குழி சீரமைப்பு அறுவை சிகிச்சையுடன் செயற்கைக் கண் பொருத்துவதற்கான தேவையான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. இந்த வெற்றிகரமான சிகிச்சை மூலம் சிறுமியின் முக அமைப்பு இயல்பான தோற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இந்த அரிய மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினருக்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.