தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – மஹா காலபைரவர் சித்தர் பீடத்தில், தென்தமிழகத்தில் தனிச்சிறப்பாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ குருமகாலிங்கேஸ்வரருக்கு ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் இன்று கோலாகலமாக நடைபெற்றன.
இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற்ற விழாவில், ஸ்ரீ குருமகாலிங்கேஸ்வரருக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ குருமகாலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார். ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பருவமழை நன்கு பெய்து விவசாயம் செழிக்கவும், உலக மக்கள் நலமுடன் வாழவும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகவும் வேண்டி ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா காலபைரவருக்கு யாக பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும் மஞ்சள், சந்தனம், இளநீர், பால் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் நடைபெற்றன. விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.