கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து பசுவந்தனை வழியாக கப்பிகுளம் கிராமத்திற்கு தடம் எண் 84 பேருந்து தினமும் இரண்டு சுற்றுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்கப்பட்டு வந்த பேருந்தின் மேற்கூரை பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதற்கு பதிலாக புதிய பேருந்து இயக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் புதிய அரசு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக கப்பிகுளம் கிராமத்திற்கு புதிய பேருந்து ஒதுக்கப்பட்டது. இன்று கிராமத்திற்கு வந்த புதிய பேருந்தை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயக்கனி அரிச்சந்திரன் தலைமையில் கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், பேருந்திற்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவர் பெருமாள்சாமி, ஊர் பெரியவர்கள் கருப்பசாமி, ஜெயசிங், சமூக செயற்பாட்டாளர் கப்பிகுளம் பாபு, தமிழக வெற்றி கழக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மனோஜ்குமார், மின்சார வாரிய தொழிற்சங்க நிர்வாகி ராஜேஷ்குமார், இளைஞர் மன்ற நிர்வாகிகள் தமிழ்ராஜ், சதீஷ்குமார், விவேக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய பேருந்து சேவை இயக்கப்பட்டதன் மூலம் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் கிராம மக்களுக்கு பெரும் பயன் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.