உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மறையின் தலைவராக இருக்கும் போப் 14-ஆம் லியோ அவர்களின் புகைப்படத்தை, அரசியல் கட்சி தலைவர் ஒருவரின் படத்துடன் இணையாக வைத்து விளம்பர பதாகையில் பயன்படுத்தியதற்கு பாண்டியபதி பரதவர் நல தலைமை சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள SRM ஹோட்டலில், தமிழ்த்தேசிய கிறிஸ்தவர் இயக்கம் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் நலக் கட்சி சார்பில் “நாம் தமிழர் கட்சி” தலைவர் சீமான் அவர்களின் உரையாடல் நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட விளம்பர போர்டில், போப் அவர்களின் புகைப்படம் அரசியல் தலைவர்களுடன் இணைக்கப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும், உலக அமைதியின் தூதுவராகவும், மாபெரும் மதத் தலைவராகவும் இருக்கும் போப் அவர்களின் புகைப்படத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது முற்றிலும் தவறு. இது எதிர்காலத்தில் மற்ற கட்சிகளுக்கும் தவறான முன்னுதாரணமாக மாறக்கூடும்” என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தை காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு, அந்த விளம்பர பதாகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.