திருவைகுண்டம் – தூத்துக்குடி பாதையில் இயங்கி வரும் தடம் எண் 67-பி மகளிர் விடியல் பேருந்து, ஸ்ரீ மூலக்கரை கிராமத்துக்குள் வருவதற்கான கோரிக்கை ஒரு ஆண்டாக நீண்டுகொண்டே வருகிறது. ஆனால், மக்களின் எதிர்பார்ப்புக்கு பதிலாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளின் மெத்தன நடைமுறையே தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கிறது.

திருவைகுண்டம் தாலுகாவின் ஸ்ரீ மூலக்கரை தனி பஞ்சாயத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், தினசரி ஊழியர்கள், தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் திருவைகுண்டம், தூத்துக்குடி பேட்மாநகரம், வாகைக்குளம், கோரம்பள்ளம் போன்ற பகுதிகளுக்கு அன்றாடம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, சமூக ஆர்வலர் சுரேஷ்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொகுதி எம்எல்ஏ உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர். அதன் பின்னர், தொகுதி எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் அவர்கள் நேரடியாக தன்னுடைய லெட்டர் பேடில் பரிந்துரை செய்து, 67-பி பேருந்து ஸ்ரீ மூலக்கரைக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க திருவைகுண்டம் போக்குவரத்து கிளை (பனிமனை) அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கினார்.

ஆனால், அதிர்ச்சி என்னவென்றால் எம்எல்ஏ எழுதிய பரிந்துரை கடிதத்துக்கூட இன்று வரை எந்த பதிலும் தாக்கத்துடனும் நடவடிக்கையுடனும் இல்லை!

பொதுமக்கள் கூறுவதாவது: “ஒரு வருடமாக வேண்டுகோள் வைத்தோம்... பல மனுக்கள் அளித்தோம்... இப்போது எம்எல்ஏ வரையிலும் விஷயம் சென்றது. ஆனாலும் போக்குவரத்து கழக அதிகாரிகள் அசையவே இல்லை. அவர்களின் தொடர்ந்த அலட்சியமே இந்த நிலைக்கு காரணம்” என மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசு துறையின் இந்த மெத்தனமான செயல்விளைவால், தமிழக அரசுக்கு கூட அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகிவிட்டதாக மக்கள் எச்சரிக்கின்றனர். இதனைக் கண்டித்து, ஸ்ரீ மூலக்கரை கிராம மக்கள் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், வரும் திங்கட்கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

“அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விழித்தெழும் வரை, நாங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என கிராம மக்கள் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.