பிரையன்ட் நகர் பகுதி திமுக மற்றும் 45வது வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிரையன்ட் நகர் பகுதியின் 9வது தெரு கிழக்கு பகுதியில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி நகரமைப்புக் குழு தலைவரும், பிரையன்ட் நகர் பகுதி செயலாளரும், 45வது வட்ட திமுக கவுன்சிலருமான ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:
“நம்முடைய கழக நிர்வாகிகள் டி.கே.எஸ். துரை, வழக்கறிஞர் அணி ரூபராஜா, தனபால், மாமன்ற உறுப்பினர், இந்த பகுதியைச் சேர்ந்த பெரியநாயகம், முருகானந்தம், செந்தில், ராபின், சுப்பிரமணி, சதீஷ் உள்ளிட்ட மேடையில் வீற்றிருக்கும் கழக செயல்வீரர்களுக்கும், கல்யாணி என்ற சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரிகளுக்கும் அன்பு வணக்கம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலமைச்சர் நல்லாட்சி வழங்கி வருகிறார். ஒன்றிய மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக இருப்பதை நிரூபிக்கின்றன. தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.
தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது. சூரிய மின்உற்பத்தி, பல புதிய தொழில் நிறுவனங்கள், டைடல் பார்க், மின் உற்பத்தி நிலையங்கள், கடல் சார்ந்த தொழில்கள், பசுமை ஹைட்ரஜன் நிறுவனம் போன்ற பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ஒரு கோடி 31 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மேலும் 32 லட்சம் மக்களுக்கு மாதம் ரூ.1200 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்துள்ளது. இதை நான் சொல்லவில்லை; மத்திய அரசே பாராளுமன்றத்தில் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, 100 நாள் வேலை நிதி, வீட்டு மின் இணைப்பு போன்ற பல நிதிகளை வழங்கவில்லை. இருந்தாலும் ‘நிதி கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி – நான் நிர்வாகத்தை நடத்துவேன்’ என்று முதலமைச்சர் கூறி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.
மகளிர் உரிமைத்தொகை குறித்து தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அனைத்து பெண்களுக்கும் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வருமாறு முதலமைச்சர் ஏற்பாடு செய்தார். அதுதான் அவரது அரசியல் நுண்ணறிவு.
14 வயதிலிருந்து பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தவர் முதலமைச்சர். இளைஞரணி, பொருளாளர், செயல் தலைவர், தலைவர், துணை முதலமைச்சர் என பல பொறுப்புகளை வகித்து இன்று முதலமைச்சராக இருந்து நல்லாட்சி வழங்கி வருகிறார்.
பாட்டாளி தொழிலாளி, விவசாயி, நெசவாளர், மீனவர், ஒப்படை தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து மக்களின் வாழ்க்கை நிலையை நன்கு அறிந்தவர். அவர் காலால் நடந்து செல்லாத ஊர், தெரு எதுவும் இல்லை என்ற அளவுக்கு மக்களோடு இணைந்து பணியாற்றியவர்.
இந்த நல்லாட்சி தொடர வேண்டும். கல்வி, வளர்ச்சி உள்ளிட்ட பல திட்டங்கள் மேலும் கிடைக்க முதலமைச்சர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும். நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஐந்து ஆண்டுகள் எங்காவது போய் இருப்பவர்கள் அல்ல. மக்களோடு மக்களாகவே இருக்கிறோம். உங்களுடைய பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட பல பணிகள் செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில இடங்களில் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன.
நம்முடைய எம்.எல்.ஏ நிதி மூலம் பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 700 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்புக்காக அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளோம். உங்களுக்காக தொடர்ந்து பணியாற்ற நாம் தயாராக இருக்கிறோம். அதேபோல் நீங்கள் தொடர்ந்து திமுகக்கு ஆதரவு வழங்க வேண்டும்,” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சரவணக்குமார், தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, திமுக வட்ட செயலாளர்கள் சுரேஷ், மூக்கையா, சிங்கராஜ், சுப்பையா, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஷ்வரன் சிங், மருத்துவர் அணி அருண்குமார், திமுக பிரதிநிதி கல்யாணி என்ற சிவசுப்பிரமணியன், சரவணன், கழக செயல்வீரர்கள் முருகானந்தம், பெரிய நாயகம், ரஜினி முருகன், பச்சை பெருமாள், லெ. துரை, தகவல் தொழில்நுட்ப அணி குமார், சுப்பிரமணிய கட்டபொம்மு, செட் செல்வா, முருகன் (குருவிமேடு), ஆதிலிங்கம், முருகன் (ஆட்டோ) உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் கீதா ஜீவனுக்கு, திமுகவைச் சேர்ந்த லெ. துரை தலைமையில் அன்பளிப்பாக அலங்கார ரோஜா மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.