டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது என தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது “குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருப்பது மிகுந்த பொய்யானதும், தரம் தாழ்ந்த அரசியல் நோக்கத்துடன் கூறப்பட்டதுமானது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்களுக்கு எதிராக செய்து வரும் தவறுகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத பாஜகவினர் அவரை அரசியல் வலையில் சிக்க வைக்க முயல்கின்றனர்,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, “தீவிரவாதத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஒருமித்த குரல் எழுந்துள்ள வேளையில், காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் குற்றம்சாட்டும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது பாஜகவின் சதி நோக்கத்தைக் காட்டுகிறது. பொன் ராதாகிருஷ்ணன் இந்த பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்; இல்லையேல் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் அவர் தூத்துக்குடிக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும்,” என்றும் முரளிதரன் எச்சரித்துள்ளார்.