மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதாஜீவன் இன்று மாலை எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் அரசியல் கருத்துகளை வெளியிட்டார். செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:
“நம்முடைய தேர்தல் அறிக்கையே இந்த தேர்தலின் ‘சூப்பர் ஸ்டார்’. மக்களுக்கு நேரடியாக பயன்படும் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதில் முக்கியமாக, பெண்களுக்கு ₹8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இந்த கூப்பன் மூலம் அவர்கள் அருகிலுள்ள கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்,” என்றார்.
மேலும், பெண்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், “மகளிர் உரிமைத் தொகை முறையாக வழங்கப்பட்டு வருகிறது. அதை ₹2000 ஆக உயர்த்த உள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு ₹2500, முதியோருக்கு ₹2000 வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.
மீனவர்கள் நலத்திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்து, “மீன்பிடித் தடை கால உதவித்தொகை ₹500 இலிருந்து ₹8000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது அதை ₹12000 ஆக மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் குறித்து, “இணைப்பு சாலைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். விவிடி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்,” என்றும் கூறினார்.
வேலை வாய்ப்பு குறித்து, “பர்னிச்சர் பார்க் திட்டம் விரைவில் நிறைவு பெறும். அதே பகுதியில் ‘வின் பாஸ்ட்’ கார் நிறுவனம் தொடங்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன,” என்றார்.
அரசியல் விமர்சனங்களில், “பெண்களை மதிக்க தெரியாத கூட்டம் தான் அதிமுக. ஜெயலலிதா போன்ற பெண் தலைவரை கொண்ட கட்சி என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். என்னையோ, கனிமொழியையோ இழிவாக பேசுபவர்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை,” என்று கடுமையாக விமர்சித்தார்.
அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் குறித்து, “அவரது பேச்சு தரக்குறைவானது. மக்கள் அதற்கு தகுந்த பதில் தருவார்கள். மழைக்காலங்களில் நான் நேரில் சென்று பணியாற்றியதை மக்கள் அறிவார்கள்,” என்றார்.
மேலும், “வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடி வந்து ஆறு தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார்,” என்றும் தெரிவித்தார். தவெக கட்சி வேட்பாளர் விஜய் குறித்து எழுந்த கேள்விக்கு, “எல்லோரும் பாஜக கட்சியின் சிப்பாய்கள் தான்,” என்று பதிலளித்து தனது பேட்டியை நிறைவு செய்தார்.