“அமைச்சராக நான் இருந்த போது செய்த சாதனைகளை ஒரே மேடையில் விவாதிக்க தயார்… கீதாஜீவன் தயாரா?” என்று அ.தி.மு.க. வேட்பாளர் செல்லப்பாண்டியன் திறந்த சவால் விடுத்து தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் செல்லப்பாண்டியன், இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கோரி பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அவர் கூறியதாவது: “கடந்த இரண்டு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற கீதாஜீவன், மக்களுக்காக என்ன சாதனை செய்தார் என்பதை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். மழை, வெள்ளம் போன்ற அவசர காலங்களில் நான் நேரடியாக களத்தில் இறங்கி, என் வீட்டிலேயே உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சென்று வழங்கினேன். மதுரையிலிருந்து காய்கறிகள் வரவழைத்து தொடர்ந்து சேவை செய்தேன்.
ஆனால் அதனை கூட நான் செய்யவில்லை என்று பொய்யாக கூறுவது வருத்தமளிக்கிறது. நான் ஒரு சாதாரண தொண்டராக இருந்தபோதும் மக்களுக்காக இத்தகைய பணிகளை செய்தேன். ஆனால் அமைச்சராக இருந்தவர் அந்த பொறுப்பை கூட நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் இந்த தொகுதிக்கு எந்த பெரிய முன்னேற்றமும் இல்லை. மழைக்காலத்தில் ஊருக்குள் வெள்ளம் புகுவதற்குக் காரணமே தி.மு.க. ஆட்சியின் அலட்சியம். 140 அடி அகலமிருந்த ஓடையை 30 அடியாக சுருக்கியதே இன்றைய பிரச்சனைகளுக்கு காரணம்.
நான் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த திட்டங்களை மக்கள் முன்னிலையில் விவாதிக்க தயாராக இருக்கிறேன். அதேபோல் கீதாஜீவன் தனது சாதனைகளை கொண்டு ஒரே மேடையில் விவாதிக்க வருவாரா?” என சவால் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் சைவவேளாளர் சங்கம், கம்பர் சமுதாயம், முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, செல்லப்பாண்டியனுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த சவால் தேர்தல் சூழலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், எதிர்க்கட்சியின் பதிலை எதிர்பார்த்து அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன.