தூத்துக்குடி அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், Naam Tamilar Katchi தலைவர் சீமான் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் வெளிச்சத்திற்காக, மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி வாய்க்கு வந்ததை பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிதற்றிக்கொண்டிருக்கும் மக்களால் சீமான் அரசியல் பொய்யர் எனவே அழைக்கப்படுகிறார்.

அரசியல் களத்தில் இல்லாத மறைந்த தலைவர்களைப் பற்றி பேசும்போது, அவர்களின் பங்களிப்புகளையும் மரபுகளையும் நினைவுகூர்வது அரசியல் நாகரீகத்தின் ஒரு முக்கிய அங்கம். குறிப்பாக அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக அரசியலில் பேராதிக்கம் செலுத்திய தலைவர்கள். இன்று கூட எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக மக்களின் இதயங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இத்தகைய எம்.ஜி.ஆர் குறித்து சீமான் இன்று பேசிய தரம் தாழ்ந்த பேச்சு, அரசியல் களத்தில் மன்னிக்க முடியாத குற்றமாகும். தாங்கள் தலைவர் எனக் கொண்டாடும் மேதகு பிரபாகரனே கூட எம்.ஜி.ஆர் அவர்களை தலைவராக மதித்தவர் என்பது வரலாறு. அதைப் புரியாமல் பிதற்றும் நிலை, சீமான் அரசியல் அறிவின்மையை வெளிப்படுத்துகிறது. இனியும் எங்கள் தலைவர்களை குறைத்து பேசும் நிலை தொடர்ந்தால், அது சீமான் அரசியல் வாழ்க்கையின் முடிவிற்கான தொடக்கம் என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.

மறைந்த எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா வழியில், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி அமைப்போம் என்ற இலக்குடன் நாம் உறுதியாக முன்னேறிக்கொண்டிருக்கிறோம்” என சி.த.செல்லப்பாண்டியன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.