தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்றார்.

தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி செயலாளர் செல்வக்குமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் திமுக வக்கீல் அணி மாநில இணைச் செயலாளர் ரவிச்சந்திரன், சட்டத் துறை துணைச் செயலாளர் ராஜா முகமது, திமுக தலைமைக் கழக வக்கீல் மனோஜ் ஆகியோர் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் திமுக வக்கீல் அணியின் பங்குபற்றல் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகையில்,

 “2026ஆம் ஆண்டில் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டும். அதற்காக நாம் அனைவரும் இப்போதே களப்பணிகளைத் தொடங்க வேண்டும். பீகார் மாநிலத்தில் நடந்தது போன்று வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், வாக்கு திருட்டு போன்றவை தமிழகத்தில் நடக்காமல் தடுக்க திமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்,”

என்று வலியுறுத்தினார். மேலும்,

 “எவ்வளவு நெருக்கடியை கொடுத்தாலும் பாஜகவின் கனவு தமிழகத்தில் ஒருபோதும் நனவாகாது. மக்களின் மனதில் திமுகவின் மீது நம்பிக்கை உறுதியாக உள்ளது. ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்,”

என்றும் உறுதியுடன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ராமஜெயம், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, கலை இலக்கிய அணி அமைப்பாளர் ரகுராமன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயக்குமார் ரூபன், ஜெபதங்கம் பிரேமா, ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் இளையராஜா, சரவணகுமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், சதீஷ்குமார், கோட்டாளம், பகுதி செயலாளர்கள் சிவக்குமார் ஆஸ்கர், ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், மாநகராட்சி கணக்குக்குழுத் தலைவர் ரெங்கசாமி, வக்கீல் அணி நிர்வாகிகள் கிருபாகரன், கபடி கந்தன், பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

திமுக வக்கீல் அணி அமைப்பின் விழிப்புணர்வு, ஒற்றுமை மற்றும் தீவிரச் செயல்பாட்டை வலியுறுத்திய இந்தக் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.