கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் குரு வெங்கட்ராஜ் மேற்பார்வையில், கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) பிரேமா தலைமையிலான குழு இன்று (09.12.2025) ரோந்து பணியில் இருந்தது.

அப்போது திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கோவில்பட்டி பாரதிநகரை சேர்ந்த மாடசாமி (எ) ராதாகிருஷ்ணன் மகன் திலீபன் (எ) மனோகர் (26) என்று தெரியவந்தது. மேலும் அவர் விற்பனைக்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

போலீசார் திலீபனை கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.