தூத்துக்குடி காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அணி எண் 218 சார்பில், இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், பிராந்திய நாட்டு நலப்பணித் திட்ட இயக்ககம் (சென்னை), மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் (திருநெல்வேலி) ஆகியவற்றுடன் இணைந்து "விக்சித் பாரத் யுவா கனெக்ட் – நஷா முக்த் பாரத்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போதைப்பொருள் இல்லாத



இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தல் மற்றும் விக்சித் பாரத் @2047 என்ற வளர்ந்த இந்தியா இலக்கில் மாணவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி விக்சித் பாரத் கீதத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விக்சித் பாரத் யுவா கனெக்ட் குறும்படம் திரையிடப்பட்டு, பொறுப்புள்ள குடிமக்களாக இளைஞர்கள் உருவாக வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது.



கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் செந்தில் தலைமை வகித்து பேசுகையில், போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமிக்க இந்தியாவை உருவாக்குவதில் மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலகு 218-ன் திட்ட அலுவலரும் நோடல் அலுவலருமான முனைவர் கருப்பசாமி ஒருங்கிணைத்து, வரவேற்புரை யாற்றினார். விக்சித் பாரத் யுவா கனெக்ட் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.



சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. வெளியப்பன், இளைஞர்கள் போதைப்பொருட்களிலிருந்து விலகி, நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து சமூக முன்னேற்றத்தில் தங்களை அர்ப்பணித்தால்தான் 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்று வலியுறுத்தினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ. அருணாச்சல ராஜன் வாழ்த்துரை வழங்கி, சமூக நலன் மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்காக தொடர்ந்து சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 218-ன் சேவையை பாராட்டினார்.



தூத்துக்குடி மை பாரத் கேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் ஞான சந்திரன், மாணவர்களுக்கு My Bharat இணையதள பதிவு குறித்த விளக்கத்தை வழங்கி, அதன் மூலம் இளைஞர்களுக்கு கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து அனைத்து மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களும் விக்சித் பாரத் உறுதிமொழி ஏற்று, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதியேற்றனர்.



பாண்டிச்சேரி பல்கலைக்கழக முதுகலை மாணவர் ஈஸ்வர் சேஷு போட்லா, "யூத் ஐகான்" என்ற தலைப்பில் பவர்பாயிண்ட் விளக்கவுரையாற்றி, தலைமைத்துவம், தன்னார்வ சேவை, புதுமைச் சிந்தனை மற்றும் சமூகப் பொறுப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறை, தேசப்பற்று மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்திய இந்நிகழ்ச்சி, இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பயனுள்ள நிகழ்வாக அமைந்தது. நிறைவில், நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் பனிமலர் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியை கல்லூரியின் இரண்டாம் ஆண்டு எம்.பி.ஏ. மாணவி அக்ஷ்யா தொகுத்து வழங்கினார்.