தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேக்கம், கால்வாய் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், அய்யர்விளை குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் அவர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார். அங்குள்ள பம்ப் ரூம் பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை உடனடியாக நீக்கி சீரமைக்கும் நடவடிக்கைகளை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேசமயம், அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

“10 ஆண்டு அதிமுக ஆட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்பட்டதால் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், ரூரல் பகுதியிலிருந்து மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட இந்த பகுதி சாலை, கால்வாய், மின்விளக்கு உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலமோ, கொரோனா காலமோ—எந்த சூழலாக இருந்தாலும் மக்கள் அருகில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் தலைவரின் உத்தரவு,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், “தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவர்கள் மக்களின் நலனுக்காக செயல்படுபவர்கள் அல்ல. தினந்தோறும் நீங்கள் அருகில் காண்பவர்கள் யார் என உணர்ந்து, எதிர்காலத்திலும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும். உங்கள் நன்மைக்காக செயல்படுபவர்கள் நாங்கள்தான்,” எனவும் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் ஜெயசீலி, இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.