ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், 100 சதவீத எழுத்தறிவை அடையும் நோக்குடன் “எழுத்தறிவை கொண்டாடுவோம்” நிகழ்ச்சி தூத்துக்குடி செயிண்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மற்றும் புதிய பாரத எழுத்தறித் திட்டம் (2022–2027) இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. மாவட்டம் முழுவதும் உள்ள 13 வட்டாரங்களில் செயல்படும் பயிற்சி மையங்களில் கற்போர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக (1) கற்றல்–கற்பித்தல் உபகரணங்கள் அரங்கம், (2) பாரம்பரிய உணவு அரங்கம், (3) கைவினைப் பொருள் அரங்கம் என மூன்று சிறப்பு அரங்குகள் கற்போர்களாலும் தன்னார்வலர்களாலும் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. இவ்வரங்குகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை தாங்கி உரையாற்றி, சிறப்பாக பங்கேற்ற தன்னார்வலர்கள் மற்றும் கற்போர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
உதவி திட்ட அலுவலர் முனியசாமி திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு திட்ட பயிற்சி மையங்களில் பயிலும் கற்போர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆடல், பாடல், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மக்கள் மகிழ்ச்சி கலைக்குழுவினர் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளால் விழாவை உற்சாகப்படுத்தினர்.

கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலர் பத்மாவதி மற்றும் தூத்துக்குடி நகர் புற வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்செந்தூர் ஆசிரியர் பயிற்சிநர் ஜெகதீஸ் பெருமாள் நன்றியுரை ஆற்றினார். ஆரோக்கிய ராசையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பாக நடைபெற ஆசிரியர் ஹேனா, மாவட்ட தன்னார்வலர் சித்திரா ஆனந்தி, கருங்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து மூன்று அரங்குகளையும் வடிவமைத்தனர்.
13 வட்டார ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

காலை நேரத்தில் அரங்குகள் அமைக்கும் முன்னேற்பாடுகளும், மதியத்தில் பாராட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றன. மொத்தத்தில், “எழுத்தறிவை கொண்டாடுவோம்” விழா தூத்துக்குடியில் கல்வி உற்சாகத்தையும், எழுத்தறிவின் முக்கியத்துவத்தையும் மறுபடியும் மக்களிடம் எடுத்துச் சென்றது.