ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறிவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் எதேச்சாதிகார நடவடிக்கைகளை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் நவம்பர் 11ஆம் தேதி தூத்துக்குடி மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்களும், தமிழ்நாடு அரசின் அமைச்சர்களுமான பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தில், எதேச்சாதிகாரப் போக்கில் தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (SIR) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நோக்கம் சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் பாஜகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை குறிவைத்து நீக்குவதோடு, தகுதியற்ற வாக்காளர்களை சேர்க்கும் சதித்திட்டம் என தோன்றுகிறது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், தகுந்த திட்டமிடல் இன்றி அவசரகதியில் எஸ்ஐஆர் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கூட சரிசெய்யாமல், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்துவது மக்களின் வாக்குரிமையை பறிப்பதாகும். இது ஜனநாயகத்தின் அடித்தளத்தையே புதைப்பதற்குச் சமம்,” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் தொடர்ந்துள்ளனர்: “வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், பெரும்பாலான வாக்காளர்கள் விவசாயிகளாகவும் கிராமப்புற மக்களாகவும் இருப்பதால், கணக்கெடுப்பு படிவங்களைப் பெற்று சரியாக நிரப்புவதற்கும் திருப்பி அளிப்பதற்கும் போதிய கால அவகாசம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலான தகுதியுள்ள வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

இப்போது பல இடங்களில் பிஎல்ஓ மற்றும் பிஎல்ஏக்கள் ஒருங்கிணைப்பின்றி செயல்படுகின்றனர். இணையதள வாக்காளர் பட்டியல்களில் குழப்பங்கள் நிலவுகின்றன. இதனால் வாக்காளர் பட்டியல் சீராய்வு செயல்முறை முழுமையாக வெளிப்படைத்தன்மையற்றதாகி விட்டது.” எஸ்ஐஆர் திட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனை கண்டித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் நவம்பர் 11ஆம் தேதி காலை தூத்துக்குடி மாநகர சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் (VVD சிக்னல்) அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம், ஆதித்தமிழர் பேரவை, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழ்புலிகள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட பல கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் முன்னோடிகள் திரளாக பங்கேற்க உள்ளனர்.

“மக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் இந்தக் கண்டனத்தில் அனைவரும் திரண்டு பங்கேற்று, ஜனநாயகத்தை காப்போம்,” என்று அமைச்சர்கள் பி.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.