தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் நாளுக்கு நாள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தீவிரமாக எழுந்துள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட ஜெயலானி தெருவில் உள்ள ஒரு பழைய கிணறு ஏற்கனவே ஒரு நபரால் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. மீதமிருந்த இடம் பல ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென அங்கு கடை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டுமானம் செய்து வரும் நபர், “நான் யாரிடம் பேச வேண்டுமோ எல்லாரிடமும் பேசிட்டேன்” என்று தைரியமாக பதிலளிப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் மாநகராட்சி நிர்வாகமா? ஆளும் கட்சியின் ஆதரவு தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோல் எட்டையாபுரம் மெயின் ரோட்டில் மாநகராட்சியின் பம்பிங் ஸ்டேஷனுக்குள் உள்ள மிகப்பெரிய நிலப்பகுதி பல கோடி மதிப்புள்ளதாய் இருந்தும், அது கூட தற்போது ஒரு நபரால் முழுமையாக தகர்சீட்டுடன் மூடப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்துக்குள் தான் மழைநீர் வடிகால் மோட்டார் ஸ்விட்சும் இருப்பதால், மாநகராட்சி பணியாளர்கள் தினமும் அந்த ஆக்கிரமிப்பு இடத்துக்குள் சென்று ஸ்விட்சை இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறுவதாவது “மாநகராட்சி சொத்துக்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக பறிபோகுது… பறிபோகுது…! இதை தடுக்க யாரும் முன்வரவில்லை. நடவடிக்கை எடுப்பது யார்?” எனக் கேள்வி எழுப்புகின்றனர்.