விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சந்திரகிரி–கொள்ளம்பரம்பு பகுதியில் செயல்பட்டு வரும் கே.கே.எம் கல் கோரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், PUCL தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் சுரேஷ் மீது நெல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிக்கும் வகையிலும் குளத்தூரில் மக்கள்தொகை திரண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயல்பாட்டாளர் கிருஷ்ணமூர்த்தி, மின்னல் அம்ஜத், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சாமு காந்தி உள்ளிட்டோர் பேசி, கல் கோரி நிறுவனத்தின் செயல்பாடுகள் சுற்றுப்புற சூழல், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாகவும், உடனடி நடவடிக்கையாக கல் கோரியை மூட மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பெரும் திரளான பொதுமக்கள் பங்கேற்பு

குளத்தூர் சமூக செயல்பாட்டாளர் எபநேசர், அய்யனார்புரம் அரி ராம் ஜெயராமன், குளத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சின்னச்சாமி, ஸ்ரீ வைகை கொண்டபெருமாள்புரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலசுப்பிரமணியன், கிராம தலைவர் பழனிச்சாமி, மக்கள் நல இயக்க பொறுப்பாளர் முத்து மாடசாமி, அழகு தங்கம், ஜோதிமணி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து பேசினர்.

குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்களும், விவசாயிகளும் பெருமளவில் பங்கேற்றனர். குளத்தூர் காவல்துறை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

1. PUCL தேசிய பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

2. சந்திரகிரி–கொள்ளம்பரம்பில் உள்ள கே.கே.எம் கல் கோரியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

3. கிராம சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட ஆட்சித்தலைவர் தடை விதிக்க வேண்டும்.

4. குளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்றும் வகையில் நிரந்தர வசதி அமைக்க வேண்டும்.

5. குளத்தூர் – ராமச்சந்திராபுரம் கிராம மக்களுக்கு ரேஷன் பொருட்களை அவர்கள் கிராமத்திலே வழங்க வேண்டும்.

6. ஸ்ரீ வைகை குண்டப்பெருமாள்புரம் கண்மாய் நீர்பிடிப்பு வருகால் புதியதாக அமைக்க வேண்டும்.

மாதவன் சால்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கண்மாய் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.

கடலுக்குச் செல்லும் தண்ணீர் கண்மாயில் செல்ல ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

7. அய்யனார்புரம் கிராமத்தில் மீட்டெடுக்கப்பட்ட மேச்சல் தரை அனாதின நிலங்களை மக்களுக்கே வழங்க வேண்டும்.

8. வைப்பார் பஞ்சாயத்து கலைஞானபுரம் – துலுக்கன்குளம் பகுதியில் சிப்காட் நிலங்களை தனியார் உப்பளங்களுக்கு வழங்கக்கூடாது.

அப்பகுதியில் புதியதாக அமைக்கப்படும் சாலைகள் தரமான சாலைகளாக அமைக்கப்பட வேண்டும்.