விளாத்திகுளம் வட்டம் குளத்தூர் தென்பாகம் பனையூர் கிராமத்தில் பலவேசக்காரன் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் குளத்தூர் பெரிய கண்மாய் – கோவங்குளம் கண்மாய் இணைக்கும் கால்வாய் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்து நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் வேல்முனியாண்டி அவர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தார்.

பனையூர் கிராமம் சர்வே எண் 511/53–ல் பல தலைமுறைகளாக பலவேசக்காரன் கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வந்த இடத்தை, பனையூர் வேலையா நாடார் மகன் மாணிக்கம் நாடார் ஆக்கிரமித்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குளத்தூர் பெரிய கண்மாய் – கோவங்குளம் கண்மாய் கால்வாயும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர் செல்லும் வழி தடைப்பட்டு, மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு நீர் கடலுக்கு வீணாகச் செல்கிறது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கால்வாய் மற்றும் கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றி, தகுந்த நடவடிக்கை எடுத்து கோவில் இடத்தை மீட்டு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சார்பில் வேல்முனியாண்டி கோரிக்கை விடுத்தார். மனு அளிக்கும் போது கோபால் உடன் இருந்தார்.