தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில், மழைக்காலத்தை முன்னிட்டு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையேற்றார்.

அப்போது பேசிய அவர்,
“மழைக்காலங்களில் பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் புதிய கால்வாய்கள் அமைக்கப்பட்டதால் 2024ஆம் ஆண்டில் பாதிப்பு குறைவாக இருந்தது. தற்போது பக்கிள் ஓடை உள்பட 11 புதிய வழித்தட கால்வாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் நேரடியாக கடலில் கலக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகருக்குள் காட்டாற்று வெள்ளம் புகாமல் தடுக்க தேவையான கட்டமைப்புகளும் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

மேலும், 60 வார்டுகளில் உள்ள 320 கிலோமீட்டர் நீள சிறு, பெரிய அனைத்து கால்வாய்களிலும் தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கென இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுகிறது என்றும், அதிகளவில் மழை பெய்து நீர் தேங்கினால், சிறிய, நடுத்தர, பெரிய வகை 55 மோட்டார்கள் உடனடியாக பயன்படுத்தி தண்ணீரை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். கூடுதலாக கழிவுநீர் அகற்றும் வாகனங்களும் தேவைக்கேற்ப பயன்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“மாசு இல்லாத தூத்துக்குடியை உருவாக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் எந்நேரமும் நேரடியாக எனக்கு தகவல் தெரிவிக்கலாம்” என்று மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகர்நல அலுவலர் சரோஜா, உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், இளநிலை பொறியாளர்கள் செல்வம், பாண்டி, லெனின், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜசேகர், நெடுமாறன், ராஜபாண்டி, ஆணையரின் நோமுக உதவியாளர் துரைமணி, மேயரின் நோமுக உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.