தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேக்கம் மற்றும் கால்வாய் அடைப்பு ஏற்படாத வகையில் அரசுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணி செய்ய வேண்டும் என வழிகாட்டப்பட்ட நிலையில், நிலைமையை நேரடியாக கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முத்தையாபுரம் பொன்னாண்டி நகர் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கொட்டும் மழையிலும் குடை பிடித்தவாறு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை விரைவாக அகற்றியும், கால்வாய்களை உடனடியாக சுத்தப்படுத்தியும், பொதுமக்களுக்கு தடங்கல் ஏற்படாது நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, இளநிலை பொறியாளர் செல்வம், கவுன்சிலர் விஜயகுமார், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.