தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் முன்னிலை வகித்தார். துணை அமைப்பாளர் வக்கீல் பால்துரை வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கும், மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைக்கும் இணங்க நடைபெறும் இக்கூட்டம் மிக முக்கியமானது. வரும் 27ம் தேதி இளம் தலைவர் உதயநிதி பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளுடன், பொதுமக்கள் நன்மை அடையும் வகையில் இளைஞர்கள் அனைவரும் ஒருமித்துக் கொண்டாட வேண்டும்,” என்றார்.

மேலும் தொடர்ந்து அவர், “விளையாட்டு போட்டிகள், முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குதல் போன்ற மனிதநேய பணிகள் இளைஞர் அணியின் உண்மையான அடையாளம். இளைஞர் அணி ஒருமைப்பாட்டுடன் செயல்பட ராமஜெயம் முனைப்புடன் செயற்படுகிறார். வரவிருக்கும் தேர்தல் சூழலில், பிற இயக்கங்கள் பார்க்கும் முன்னுதாரணமாக திமுக இளைஞர் அணியின் பணிகள் திகழ வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஆர் படிவம் தொடர்பாக சில சக்திகள் குழப்பத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார். “எந்த தடைகளும் திமுகவை வீழ்த்த முடியாது. கனவிலும் நினைக்க வேண்டாம். இளைஞர் அணியினரை யாரும் வெல்ல முடியாது. திமுகவில் புது இரத்தம் பாய்கிறது. எதிர்காலத்தின் சக்தி இளைஞர்களே,” என்று உறுதியுடன் கூறினார்.

அமைச்சர் தொடர்ந்து, “வரும் சனி, ஞாயிறு வாக்குசாவடிகளில் எஸ்ஐஆருக்கான முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் முழுமையாக ஈடுபட்டு, நமது உரிமைகளையும், பொதுமக்கள் உரிமையையும் பாதுகாக்க வேண்டும். 2026 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைத்து, தளபதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் — இதை இலக்காகக் கொண்டு செயல்படுங்கள்,” என இளைஞர்களுக்கு உற்சாகம் அளித்தார்.

கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணை செயலாளர்கள் ஜெபத்தங்கம் பிரேமா, ஆறுமுகப்பெருமாள், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, பொதுக்குழு உறுப்பினர் சோணகுமார், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வக்குமார், வீரபாகு, ரகுராமன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின், குமார் பாண்டியன், பால்துரை, வக்கீல்கள் பூங்குமார், கிருபாகரன், கபடிகந்தன் உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர்பகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றியுரையை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுதாகர் நிகழ்த்தினார்.