தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பல தசாப்தங்களாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சாலைகள் ஆக்கிரமிப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

வி.இ.ரோடு – ரத்னா காலனி வழியாக சண்முகபுரம் பகுதிக்குச் செல்லும் மூன்று முக்கிய பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. அவற்றை ஆய்வு செய்த மேயர் ஜெகன், நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார். அதன்படி, நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுவர்களை இடித்தனர்.

ஒரே நாளில் மூன்று வழித்தடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், 30–40 ஆண்டுகளாக சிக்கலில் இருந்த பொதுமக்களுக்கு சுதந்திரமான சாலை பயன்பாடு கிடைத்துள்ளது. மேயரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி, அப்பகுதி மக்கள் உற்சாகத்தில் வரவேற்றனர்.

“புகார் வந்த 12 மணி நேரத்தில், 40 வருட ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது” – இது மேயர் ஜெகன் பொியசாமியின் அதிரடி பணியின் சான்று என பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.